October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன’

தமிழ் மக்களிடமிருந்து காணிகள் அபகரிக்கப்படுவதுடன், சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்குவதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. இதுதான் ஒரே நாடு ஒரே சட்டமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

முல்லைத்தீவு,கரைத்துரைப்பற்று தண்ணிமுறிப்பு குருந்தூர் குளப்பகுதியில் 1920 ஆம் ஆண்டு 170 ஏக்கர் வயல் நிலம் வன இலாகாத் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்த நிலையில், 1972 ஆம் ஆண்டு அரச பெர்மிட் மூலம் தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.தற்போது அந்த 170 ஏக்கரும் தமக்குரியதெனக் கூறி வன இலாகா திணைக்களம் அதனை அபகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

1972 ஆம் ஆண்டு முதல் இந்த 170 ஏக்கர் வயல் நிலத்திலும் விவசாயம் செய்து வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த மக்களுக்கு அந்த நிலத்தை விட்டால் வேறு நிலங்கள் கிடையாது.எனவே,இவ்விடயத்தில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்.

திவிலோயா திட்டத்தின் மூலம் சிங்கள மக்களுக்கு விவசாய நிலங்கள் வழங்குவதற்காக 10,000 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்படுகின்றன.அதேவேளை,தமிழ் மக்களின் விவசாய காணிகள் அபகரிக்கப்படுகின்றன.இதுதான் ஒரே நாடு ஒரே சட்டமா என கேட்க விரும்புகின்றோம்.

தொல்பொருள் திணைக்களம்,வன இலாகா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன தமிழ் மக்களின் விவசாய காணிகளை,பூர்வீக காணிகளை எப்படி அபகரிக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றன என்றார்.