May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வலி.வடக்கு காணிகளை படிப்படியாக விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்: டக்ளஸ் தெரிவிப்பு!

யாழ். வலி வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர்,

‘வலி வடக்கில் மக்களுடைய சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் பேசியதாகவும் அவர் படிப்படியாக விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, நிரந்தர நியமனம் கிடைக்காத வடக்கு சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்திற்கான தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே பாரபட்சமற்ற முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மீண்டும் நேர்முகத் தேர்வுகளை நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு, ஜனாதிபதி கோட்டபாய  மற்றும் பிரதமர் மஹிந்த  ஆகியோரின் ஒத்துழைப்புடன் மக்களுக்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க தயாராக இருக்கிறேன்’ எனவும் டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளார்.