July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் தாலிபான்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே தமது முதன்மையான கவலையாகும் என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்த 86 இலங்கையர்களில், இதுவரை 46 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பிரஜைகளுக்கு தீங்கு செய்ய மாட்டோம் என்ற தாலிபான்களின் உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.

“நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று நிறுவப்படும் என தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது.

தற்போது தலிபான் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும் சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பான இடத்தையும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் மேம்படுத்த முயலும் தீவிர மதவாதக் குழுக்களின் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது”

என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.