June 2, 2025 3:26:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார ஒழுங்குவிதிகளில் திருத்தம்: அரச நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு தளர்த்தப்பட்டிருந்த சுகாதார ஒழுங்குவிதிகள் சிலவற்றை மீண்டும் அமுல்படுத்த கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

இதன்படி அரச அலுவலகங்களுக்கு அனைத்து ஊழியர்களையும் அழைப்பதற்கான சுற்றுநிருபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தேவையான ஊழியர்களை மாத்திரம் பணிகளுக்கு அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த மாதத்தில் நடைபெறவிருந்த அனைத்து அரச நிகழ்வுகளையும் செப்டம்பர் முதலாம் திகதி வரையில் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருமண நிகழ்வுகள் தொடர்பாகவும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 500 இருக்கைகள் கொண்ட மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்பதுடன், 500 இருக்கைகளுக்கும் குறைந்த மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்றும் கொவிட் தடுப்பு செயலணியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.