July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘டெல்டா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் இதுவரை ‘டெல்டா’ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடையாளங் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதத்தில் டெல்டா பரவல் தொடர்பான புள்ளிவிபரத்தைக் காட்டும் வரைபை தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ள கலாநிதி சந்திம ஜீவந்தர, தற்போது கொழும்பு நகரத்தினுள் டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவிவருவதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை முதல் வாரத்தில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளில் அல்பா திரிபு கண்டறியப்பட்டிருந்ததுடன், 19.3 சதவீதமானோரிடையே டெல்டா திரிபு கண்டறியப்பட்டது.

எனினும், ஜூலை 31 ஆம் திகதியாகும்போது, இந்த நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளதை அவரின் டுவிட்டர் பதிவின் ஊடாக அவதானிக்க முடிகிறது.

நாட்டில் கொவிட் தொற்று நிலைமை மற்றும் பரவல் தொடர்பில் நம்பத்தகுந்த தகவல்களை வெளியிடும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரின் வெளிப்படுத்தலுக்கமைய, ஜூலை 31 ஆம் திகதிய நிலைமையின்படி, கொழும்பில் கொவிட் தொற்று உறுதியான 90 சதவீதத்துக்கு அதிகமானோரின் மாதிரிகளில் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயமானது மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியதொரு பாரதூரமான நிலைமையாகும் என கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.