July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கென வானொலி அலைவரிசை

பாடசாலை மாணவர்களுக்கென தேசிய வானொலி அலைவரிசையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சரும் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் இணைந்து இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்துள்ள நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கான தேசிய வானொலி அலைவரிசை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று நிலைமையில் ஏற்பட்ட சமூக இடைவெளி காரணமாக கல்வியில் தோன்றியுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காணும் வகையில் நாடளாவிய ரீதியில் வீச்சுக் கொண்ட வானொலிக் கல்வி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சரும், வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளனர்.

அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதால், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட வானொலி அலைவரிசையை துரிதமாக ஆரம்பிப்பதற்கு இயலுமான வரை தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அலைவரிசைகளில் நாடளாவிய ரீதியான வீச்சுக் கொண்ட அலைவரிசையை கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை ஒலிபரப்புக்குப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.