July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலையானார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டில் அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தண்டனையை எதிர்த்து கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அந்த மேன்முறையீட்டு மனு மீது விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22 ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.

இதன்படி குறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அரச சட்டவாதி விண்ணப்பம் செய்தார். அதற்கு எதிரான வாதங்களை கண்ணதாசன் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.

இதன்போது இந்த வழக்கில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரச சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரிவுரையாளர் கண்ணதாசன் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கண்ணதாசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் ஆஜராகியிருந்தார்.