July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோட்டத் தொழிலாளர்களுக்காக மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய இணக்கம்

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்த சம்மேளம் ஒன்றை அமைப்பதற்கு பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக தொழிற்சங்களுக்கு இடையே இணையம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்தில் செயற்படும் 12 தொழிற்சங்கங்கள் இதற்கான விருப்பத்தை வெளியிட்டதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்கள்மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அவர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மறுபுறத்தில் தோட்டப்பகுதிகளில் மலையக தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு கம்பனிகள் முயற்சிப்பதாகவும், ஆங்கிலேயர் காலத்தை போன்று தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதாகவும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதை தடுப்பதற்கு மலையகத்திலுள்ள பிரதான தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் இணையவழி கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தொழிலாளர் நலன்சார் விடயத்தில் கட்சி, தொழிற்சங்க பேதங்கள், அரசியல் பேதங்களுக்கு அப்பால் தொழிற்சங்கங்கள் கூட்டாக அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழல் உருவாகும் என்று பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் பட்சத்தில் கம்பனிகளின் சார்பில் முதலாளிமார் சம்மேளனம் கைச்சாத்திடுவதுபோல தொழிலாளர்களின் சார்பில் தொழிற்சங்க சம்மேளனத்தை கைச்சாத்திட வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.