July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொவிட் மரணங்கள் குறித்து பிழையான தரவுகளை வெளியிட வேண்டாம்”: அதிகாரிகளுக்கு கூறிய ஜனாதிபதி

ஜூன் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு, இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கொவிட் அல்லாத மரணங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக் கிரியைகளை நடத்துவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் மூலம், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, கொவிட் காரணமாகவன்றி வேறு காரணங்களில் மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாதம் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்போது, குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி விரிவாக விளக்கியுள்ளார்.

சில மரணங்கள் பெப்ரவரி 6 முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 4 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.