July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருட்டில் ஈடுபட்ட மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

பயணத் தடை வேளையில் யாழ்நகரில் திருட்டில் ஈடுபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணத் தடை வேளையில் யாழ்.குடாநாட்டின் நகர பகுதிகளில் ஆனைப்பந்தி,நாவலர் வீதி,கோவில் வீதி பகுதிகளில் உள்ள மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து பெறுமதியான பொருட்கள் தொலைக்காட்சி பெட்டிகள், துவிச்சக்கர வண்டி மற்றும் மின்சாதன பொருட்கள், விலை உயர்ந்த உணவு பொருட்கள், பிஸ்கட் வகைகள், பால் பக்கெட்டுகள், 5 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில் குறித்த கடை உரிமையாளர்களினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு ட்படுத்தப்படவுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவற்குழி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 20 தொடக்கம் 30 வயதினை உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மிக விரைவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.