July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் 25 ஆம் திகதி தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள நிலையில், தேவையற்ற பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அத்துடன், குறித்த தினத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை பெற்று கொள்ள, தமது இருப்பிடங்களுக்கு அருகாமையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல், இரவு 11.00 மணி வரை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினம் இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே, குறித்த தினத்தில், வழமையான நாட்களை  போன்று பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யவும், மருந்து போன்ற பொருட்களை பெற்று கொள்வதற்கும் மாத்திரமே குறித்த தினம், திறக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த தினத்தில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதே தவிர, நீக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 25 ஆம் திகதி, பொருட்களை கொள்வனவு செய்ய, ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த தினத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள், மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் என்பவற்றை மாத்திரமே திறக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.