
நுவரெலியா மாவட்டத்தின் நானுஓயா சமர்செட் தோட்டத்திலுள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்று காலை இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென அந்த குடியிருப்புப் பகுதியில் தீ பரவிய நிலையில் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது 4 வீடுகள் முழுமையாகவும் மேலும் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட வாசிகசாலையில் தங்கவைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தால் பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.