இந்தியாவில் தீவிரமடைந்துவரும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர கூறுகிறார்.
இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் கடற்பரப்பில் தொடர்பு கொள்வதன் விளைவாக, இந்தியாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்கு பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பேதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் மற்றொரு வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கோவிட்19 வைரஸின் பரவல் நாடு முழுவதும் மிக வீரியமாக பரவி வருவதால் அதிகமான கொரோனா இடைநிலை சிகிச்சை மையங்களை அமைத்து தொற்றாளர்களுக்கு படுக்கைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதனிடையே 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 63% மானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.