May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எவ்வித ஆதாரமும் இன்றி ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரும் கைது’: ரிஷாட் எம்.பியின் சட்டத்தரணி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் எவ்வித ஆதாரங்களும் முன்வைக்கப்படாத நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.

பதியுதீன் சகோதரர்கள் இருவரும் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் சட்டத்தரணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமது கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றும் ரிஷாட் எம்.பியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் ஆஜராகியிருப்பார் என்றும் மறுப்புத் தெரிவிப்பதற்கு எவ்வித தேவையும் இருக்கவில்லை என்றும் அவரது சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘எந்தவொரு நியாயமான ஆதாரமோ, சாட்சியமோ இன்றி ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டது சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும்’ என்றும் ரிஷாட் எம்.பியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.