July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விபத்துகளை தடுக்க நுவரெலியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து வெலிமடை பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று அப்பகுதியில் பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது.

இதன்போது, குறித்த இருவரும் படுங்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த காரை வீதியில் கைவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை விபத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடியதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் நடக்கும் தொடர் விபத்துகளுக்கு தீர்வாக வேகத்தடையை ஏற்படுத்தி தருமாறுகோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் அங்கு பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டதுடன், அந்த வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அங்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.