October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவின் ‘மல்க்ரெவ்’ கிரிக்கெட் கழகத்தின் தலைவராக திலகரட்ன டில்ஷான் நியமனம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இயங்கிவரும் மல்க்ரெவ் கிரிக்கெட் கழக (mulgrave cricket club) அணியின் தலைவராக இலங்கையின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் ‘மல்க்ரேவ்’ கிரிக்கெட் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

திலகரட்ன டில்ஷான் எமது கழகத்துக்காக கடந்த வருடம் விளையாடியதுடன், எமது அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற பெரிதும் உதவியிருந்தார். இலங்கை உருவாக்கிய அதிசிறந்த வீரர்களில் டில்ஷானும் ஒருவராவார் என்று அந்தக் கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை மல்க்ரேவ் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட டில்ஷான், அந்தக் கழகத்தின் முதல்நிலை அணியின் தலைவர் பதவியை ஏற்பதையிட்டு பூரிப்படைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அணியின் தலைவராக அணியை சிறப்பாக வழிநடத்த எதிர்பார்த்துள்ளேன். அதேபோன்று அடுத்துவரும் கிரிக்கெட் பருவகாலத்தில் அந்தக் கழக வீரர்களுடன் விளையாடவுள்ளேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் டில்ஷான் பதிவிட்டுள்ளார்.

2011 – 2012 காலப்பகுதியில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்ட டில்ஷான், இந்தியாவில் அண்மையில் நிறைவுக்கு வந்த வீதிப் பாதுகாப்பு உலக டி-20 தொடரில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்ததுடன், இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

115 வருடங்கள் பழமையான மல்க்ரேவ் கிரிக்கெட் கழகத்தில் 9 இலங்கை வம்சாவளி பலர் விளையாடி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.