May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1 மில்லியன் ‘அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள இலங்கை முடிவு

Vaccinating Common Image

இம்மாத இறுதியில் மேலும் ஒரு மில்லியன் ‘அஸ்ட்ரா செனகா’ கொவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுமென சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்றாக சீனா மற்றும் ரஷ்யாவின் தயாரிப்புகளான ‘சினோபார்ம்’ மற்றும்’ஸ்புட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பயன்படுத்த ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

எனினும் இந்தியாவிடமிருந்து ஏற்கனவே பத்து இலட்சம் பொதுமக்களுக்கு முதலாவது டோஸாக ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு 2 வது டோஸாக பயன்படுத்தவே இவை பெறப்படவுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை இலவசமாகவும், பணம் செலுத்தியும் மொத்தமாக 1.25 மில்லியன் ‘ அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளது.

அதேபோல் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பொதுமக்களுக்கு ஏற்றுவதற்கான அனுமதியை இன்னமும் சுகாதார தரப்பினர் வழங்காதுள்ள நிலையில், அனுமதி கிடைத்தவுடன் சீனாவின் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.