June 12, 2025 23:01:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 4 மணி நேர பொலிஸ் சுற்றிவளைப்பில் 3,871 சந்தேக நபர்கள் கைது!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர சுற்றிவளைப்பின் போது 3,871 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் 18,357 பொலிஸ் அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,108 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,430 பேரும், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 562 பேரும் கைதாகியுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 607 சாரதிகள் உள்ளடங்கலாக போக்குவரத்து விதிகளை மீறிமை தொடர்பில் 6,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தனர்.