June 15, 2025 10:03:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அரசாங்கம் ஐநா மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தயாரில்லை’

இலங்கை அரசாங்கம் ஐநா மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இல்லை என்று வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முழுமையாக மறுப்பதாகவும், அதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடைபெறவில்லை என்பதை பிரிட்டன் உள்துறை அமைச்சின் அறிக்கை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பக்கச்சார்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 30 வருட யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த மனிதாபிமான நடவடிக்கையில் ஏதேனும் சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெற்றுள்ளதா என்பதை அரசாங்கம் உள்ளக விசாரணையொன்றின் மூலம் கண்டறியவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக விசாரணைகளின் போது, ஏதாவது அநீதி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.