
Photo: Facebook/ Wimal weerawansa
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க வேண்டுமென்று அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு அந்தக் கட்சியினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கருத்தை வெளியிட்டமைக்காக விமல் வீரவன்ச நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக இன்று கட்சி தலைமையகத்தில் சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
அதன்போது தெரிவித்த சாகர காரியவசம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கான உரிமை தனக்கு இல்லை என்பதை விமல் வீரவன்ச புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்துடன் தனது கருத்து தொடர்பாக வீரவசன்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எமது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.