பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியை யாழ்ப்பாணம் மந்திகை மடத்தடியில் வைத்து தடுப்பதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில், பேரணியில் சென்றோரின் பலத்த எதிர்ப்பையடுத்து அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டு பின்வாங்கியுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில், மந்திகை மடத்தடியில் வீதியின் குறுக்கே நின்று பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து தடுக்க முயன்றனர்.
இதன்போது பேரணியில் சென்றோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இவ்வேளையில் முன்னோக்கி செல்வதென்றால் பேரணியில் வந்தோரை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் தமது முயற்சியை கைவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர்.