March 13, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எத்தகைய தடைகள் வந்தாலும் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்”

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பேரணியை நடத்துவதற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை முறியடித்து பொலிகண்டி வரை நிச்சயம் முன்னேறிச் செல்வோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ‘நானும், அனந்தி சசிதரனும் பயணித்த வாகனத்தை சிலர் தாக்கியுள்ளனர். பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் இருந்த வேளையில்தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலை நடத்தியவர்களின் கைகளில் பெற்றோல் போத்தல்களையும் காணக் கூடியதாக இருந்தது.

எனினும் ‘நாம் விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம்’ என்றதன் அடிப்படையில் நாங்கள் இந்த பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.