July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை,பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முடிவு செய்துள்ளார்.

ஆனால் அவரது உடல்நிலை குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்று உ ள்ளமை கடந்த சில நாட்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பாணி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுதல் செய்து ஆற்றில் பானை விட்டமை உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, மூன்று அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.