May 24, 2025 16:56:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு!

இலங்கையில் மலையக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும், மலையக தியாகிகள் தினம் இன்று பெருந்தோட்ட பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, பத்தனை சந்தியில் நடைபெற்றது.

மலையக மக்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்ந்து முற்பகல் 10 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகின.

1940 ஆம் ஆண்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த, முல்லோயா கோவிந்தன் மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில், ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்பதற்கு கடந்த 2019 டிசம்பர் மாதம் மலையக அமைப்புகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன்படி இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களும், மலையக புத்திஜீவிகளும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தியாகிகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.