July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாவீரர் நினைவேந்தலுக்கு’ பருத்தித்துறை நீதிமன்றமும் தடை விதித்தது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மாவீரர் நாளன்று ஒன்றுகூடுவதோ அல்லது மக்களை ஒன்றுதிரட்டி நிகழ்வுகளை நடத்துவதோ முடியாது என்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தலைத் தடை செய்யுமாறு கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித்தனியாக விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று நண்பகல் வழங்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் ‘நவம்பர் 27 – மாவீரர் நாளில்’ நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் காவல்துறையினர் நீதிமன்றங்களை நாடியிருந்தனர்.

அரசின் இந்தத் தடை நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.