July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒமிக்ரோன்’ தொற்று எதிரொலி: 2022 மகளிர் உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த இலங்கை அணி

ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகின்ற மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஒமிக்ரோன் எனப்படுகின்ற புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இரத்து செய்யப்பட்டதை அடுத்து, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளது.

நியூசிலாந்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றவுள்ள மூன்று அணிகளையும் தெரிவு செய்கின்ற நோக்கில், எட்டு நாடுகள் பங்குபெறும் மகளிர் உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் தொடரானது சிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், ஜிம்பாப்வே அமைந்திருக்கும்  தெற்கு ஆபிரிக்காவில் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் எனப்படுகின்ற வைரஸ் வேகமாக பரவி வருவதனை அடுத்து, இந்த தொடர் சர்வதேச கிரிக்கெட் சபையினால் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டது.

இதன்படி, குறித்த தொடரில் பங்குபற்றிய பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று அணிகளும் ஒருநாள் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் அணி தரவரிசையின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கான ஒருநாள் தரவரிசையில் 5 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவை முறையே 7 ஆம், 8 ஆம் இடங்களிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த தொடரில் குழு A இல் போட்டியிட்ட அயர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பினை, ஒருநாள் மகளிர் அணி தரவரிசையில் முறையே 9 ஆம், 10 ஆம் இடங்களில் காணப்பட்டமையினால் இழந்திருக்கின்றன.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இந்த தகுதிகாண் தொடரில் தமது முதல் போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக இலகுவாக வெற்றியொன்றினை பதிவு செய்திருந்ததோடு, இலங்கை தமது 2 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவிருந்த நிலையில், குறித்த போட்டி இலங்கை மகளிர் அணியில் வீராங்கனைகள் சிலருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் இரத்து செய்யப்பட்டிருந்தது.

எனினும், அடுத்த மகளிர் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறும் அணிகளை தெரிவு செய்வதற்காக 2022 தொடக்கம் 2025 வரையிலான காலப்பகுதியில் நடைபெறவுள்ள, மூன்றாவது பருவகாலத்திற்கான ICC இன் மகளிர் சம்பியன்ஷிப்பிற்கு அயர்லாந்து அணியுடன் இணைந்து இலங்கை  தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ள இந்த சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை, அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கின்ற அணிகளும் (அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்) தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்  தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நியூசிலாந்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.