June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிப்பு!

இலங்கையின் முன்னணி கிரிக்கெட் லீக் தொடரான, லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) இரண்டாவது பருவத்திற்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை வீரர்கள் ஏலத்தில், இலங்கையின் 300 வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 300 பேர் என 600 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த வீரர்கள் வரைவானது, காணொளி சந்திப்பின் மூலமாக இடம்பெறவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் மற்றும் ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் இதன்போது பங்குபற்றவுள்ளனர்.

இருபது சுற்றுக்களாக நடைபெறவுள்ள இந்த வரைவில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஐகோன் வீரர்கள் (Icon), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டயமண்ட் வீரர்கள் (Diamond), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கோல்ட் வீரர்கள் (Gold), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிளாசிக் (Classic) வீரர்கள் என்ற பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இலங்கையில் உள்ள இளம் வீரர்களை கண்டறியும் நோக்கில், உள்நாட்டு வளர்ந்து வரும் வீரர்கள் (Local Emerging) மற்றும் சப்லிமண்டரி வீரர்கள் (Supplementary Local) என்ற பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில், அறிவிக்கப்படும் குழாத்தில் அதிகபட்சமாக 20 வீரர்கள் இருக்கவேண்டும் என்பதுடன், 6 வெளிநாட்டு வீரர்களை உள்வாங்க முடியும்.

அதேநேரம், கடந்த ஆண்டு விளையாடிய வீரர்களிலிருந்து அணியொன்று, உள்ளூர் வீரர்கள் நால்வர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நால்வர் என 8 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். ஏனைய வீரர்களை வீரர்கள் வரைவிலிருந்து இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டுக்கான LPL தொடர், டிசம்பர் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.