May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவராக திசர பெரேரா நியமனம்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தொடர்பான விபரங்கள் இன்று (21) அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண எல்.பி.எல் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட திசர பெரேரா, இந்த ஆண்டுக்கான எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவராக செயல்படவுள்ளார்.

அத்துடன், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட திலின கண்டம்பி, இம்முறை எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இயக்குனராக கடமையாற்றிய கணேசன் வாகீசன், ஜப்னா கிங்ஸ் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், 3 ஆம் பிரிவு கிரிக்கெட் பயிற்சியாளராக உள்ளார். அத்துடன், கனிஷ்ட பிராந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சாரங்க விஜேரத்ன சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண எல்.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமைத்துவத்தில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, ஜப்னா அணியின் புதிய உரிமையாளராக இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், லைகா நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அறிவிக்கப்பட்டார்.

இதேவேளை,எல்.பி.எல் தொடரின் இரண்டாவது சீசன் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு எல்.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.