June 17, 2025 19:00:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

Photo: Twitter/ICC

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி- 20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டுபாயில் நேற்று (20) நடைபெற்ற பயிற்சிப் போட்டியொன்றில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 57 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ராகுல் சாஹர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

இதையடுத்து 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அரைச் சதத்தின் உதவியால் 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் (38) மற்றும் ஹர்திக் பாண்டியா (14) இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதன்படி, டி- 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடனான பயிற்சிப் போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இதேவேளை, இந்திய அணி, தமது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்வரும் 24 ஆம் திகதி எதிர்கொள்கிறது.