
எல்.பி.எல் (லங்கா பிரீமியர் லீக்) டி-20 தொடர் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை எல்.பி.எல் தொடரின் முதல் போட்டி உட்பட லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் கொழும்பு மற்றும் ஜப்னா அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
அதேநேரம், இம்முறை போட்டி தொடருக்கான முழு அட்டவணையையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
20 லீக் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், பிளே-ஓப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பன ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
டிசம்பர் 23 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதுடன், 24 ஆம் திகதி இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்று, முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், குவாலிபையர் போட்டியில் விளையாடும் என்பதுடன், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் போட்டியில் விளையாடும்.
குவாலிபையர் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதுடன், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் மோதவேண்டும். குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
2021 லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.