May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் ‘ஒமிக்ரோன்’ தொற்றியோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

டெல்லியில் ஒருவருக்கு ‘ஒமிக்ரோன்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை அந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் ஒருவர் ‘ஒமிக்ரோன்’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் .

இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ‘ஒமிக்ரோன்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், பல மாநிலங்களில் வெளிநாட்டிலிருந்து வந்த ஏராளமான பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி வந்தவருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாற்றமடைந்த ‘ஒமிக்ரோன்’ கொரோனா வகை உலக நாடுகள் பலவற்றில் பரவி வருகிற நிலையில் அது இந்தியாவிலும் தற்போது பரவ தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பேருக்கு முதன்முதலாக ‘ஒமிக்ரோன்’ கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு வந்த 72 வயது நபருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டது.

அதேபோல் தென்னாப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா வந்த 33 வயது நபருக்கும் ‘ஒமிக்ரோன்’  தொற்று ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், மொத்தமாக இந்தியாவில் 5 பேருக்கு ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது .

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பலர் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.