July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைப்பு!

காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் இன்று (23) நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கோவளம் பகுதிக்குள் கடந்த 18 ஆம் திகதி ஊடுருவிய தமிழக மீனவரின் படகு இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது.

இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரை கடற்படையினர் 18, 19ஆம் திகதிகளில் தேடுதலில் ஈடுபட்டு 20 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து காங்கேசன்துறைக்கு சென்ற தடயவியல் பொலிஸார் மற்றும் நீதிபதி சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதன் பிரகாரம் பிரேத பரிசோதனையின் போது, குறித்த மீனவர் நீரில் மூழ்கியதனால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சடலம் தமிழகம் அனுப்புவதற்கான நடவடிக்கை இடம்பெற்றது.

அதேநேரம், உயிரிழந்த மீனவருடன் பயணித்த ஏனைய இரு மீனவர்களையும் விடுவிக்குமாறு போராட்டங்கள் இடம்பெற்றது.

இதனையடுத்து இன்று உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் மட்டும் காங்கேசன்துறை ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு ஒப்படைத்த உடலம் இன்று பகல் 2 மணியளவில் உயிரிழந்தவரின் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.