June 11, 2025 15:35:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெயலலிதா, சசிகலாவின் கொடநாடு எஸ்டேட் வங்கி கணக்குகள் முடக்கம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது வரி பாக்கி நிலுவையில் இருந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருக்கிறது.

வருமான வரித்துறைக்கே வரி செலுத்த வேண்டி இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பர் மாதத்தில் பினாமி சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், இதுவரை சுமார் ரூ. 2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.