July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மோடிக்கு ராகுலால் பதிலடி கொடுக்க இயலாது’ : திரிணாமுல் கட்சியின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

‘மாற்று சக்தியாக ராகுலால் உருவாக முடியவில்லை’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘ஜகோ பங்களா’ வில் ராகுல் காந்தியை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டது.

அதில், பிரதமர் மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க ராகுல் காந்தி தவறிவிட்டார் என்றும், மம்தா பானர்ஜி அதில் வெற்றி பெற்று விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் நாளேட்டில், ராகுல் காந்தியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

‘ நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை, ராகுல் காந்தியால் வீழ்த்த முடியாது’ என திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரபூர்வ நாளேட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பதிலடி கொடுத்துள்ளார்.

பிற கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், எதிர்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படக் கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.