July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைவரும் பாகுபலி போல் மாறுங்கள்’; மோடி வேண்டுகோள்

தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைவரும் பாகுபலி போல உருவாக வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மோடி.

இதன்போது, அனைவரும் பாகுபலி போல் உருவாக வேண்டும், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லோரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதுடன், பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலி போல வலுவானவர்களாக உருவாக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தோடு, நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடினமான கேள்விகளை எழுப்பினாலும்,அமைதியான முறையில் விவாதம் நடக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.

எதிர்க்கட்சியினரின் அனைத்து சந்தேகங்களுக்கும் மத்திய அரசு விளக்கம் கூறும் எனவும், அதனை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கை, நீட் தேர்வு, மேகதாது அணை விவகாரம், காஷ்மீர் விவகாரம் மற்றும் புதிய திட்டங்கள் என பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.