July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முக்கியமான வாக்குறுதிகள் ஆளுநரின் உரையில் இல்லை; பெருத்த ஏமாற்றமளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரையில், முன்னோடி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் 16 ஆவது சட்ட பேரவை கூட்டத் தொடர் இன்று (21) நடைபெற்ற நிலையில், தொடக்கத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியிருந்தார். இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதன்போது செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி,

ஆளுநரின் உரையில் எப்போதுமே அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும்.ஆனால் இன்றைய உரையில் அப்படிப்பட்ட முன்னோடி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது.தமது தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் அதிகபட்சமாக 7 ஆயிரமாக தான் தினசரி பாதிப்பு இருந்ததாகவும், ஆனால் தி.மு.க ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமது தலைமையிலான அ.தி.மு.க அரசு முன்னர் கூறியிருந்தது.ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்திருந்தார்கள், அப்போது அறிவித்துவிட்டு, அதற்கு மாறாக இப்போது கமிட்டியை அமைத்துள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிவிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அறிவித்தார்கள்.ஆனால் அது குறித்து அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

குடும்பத் தலைவிக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் இப்படி பல திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், ஆளுநர் உரையில் இது குறித்து எதுவும் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.