
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்
கடந்த சில நாட்களாக சென்னையை விட கோயம்புத்தூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று கள ஆய்வில் ஈடுபட்டார்.
அதற்கமைய முதல் முறையாக முதலமைச்சர் கொரோனா சிகிச்சைப் பிரிவுகளில் கொவிட் பாதுகாப்பு உடை (பிபிகிட்) அணிந்து நோயாளிகளை நேரில் சென்று சந்தித்து பேசியதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐஆர்டி மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.
இரண்டு மாவட்டங்களில் ஆய்வை முடித்துவிட்டு கோயம்புத்தூர் வந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதேவேளை கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்! pic.twitter.com/bs2TeyhtxX
— M.K.Stalin (@mkstalin) May 30, 2021