June 12, 2025 10:59:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் இடைவிடாது எரியும் மயான பூமிகள்; கொரோனா உயிர் பலி 2 இலட்சத்தை கடந்தது

இந்தியாவில்  கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,293 கொரோனா இறப்புகள் பதிவானதையடுத்து அங்கு உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 201,187 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா போராட்டத்திலிருந்து மீண்டுவர தமது உறவுகளுக்காக இந்திய மக்கள் பிரார்த்தனைகளுடன் காத்திருக்கின்றார்கள்.

கடந்தவாரம் முழுவதும் மூன்று இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 360,960 என புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

இது உலக நாடுகளில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாகும்.

இதையடுத்து மொத்த எண்ணிக்கை 17.9 மில்லியனையும் கடந்துள்ளது.

கடந்த வாரம் உலகளவில் பதிவான 5.7 மில்லியன் கொரோனா தொற்றுகளில் 38% இந்தியாவில் பதிவாகியதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.

ஒக்ஸிஜன் விநியோகம் நாடு முழுவதும் மிகக் குறைவாகவே உள்ளது, மயானங்களில் தகனங்கள் இடைவிடாமல் நடைபெறுகின்ற சோகமான காட்சிகள் உலகத்தவர்களின் இதயங்களை மேலும் நொருங்கச் செய்துள்ளன.

இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து வெளிநாட்டு உதவி வரத் தொடங்கியுள்ளது. ரஷ்யா, நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் அவசர மருத்துவ உபகரணங்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளன.

பகைகளையும் சர்வதேச போட்டிகளையும் மறந்து பாகிஸ்தான் மற்றும் சீனா கூட தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியாவுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளன.

இருப்பினும், இந்த உதவிகள் ,இந்தியாவை நெருக்கடியிலிருந்து மீட்க எந்த அளவு போதுமானது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.