May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவை நெருக்கடியில் இருந்து மீட்க கூகுள் நிறுவனம் ரூ .135 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளது

(Photo : Sundar Pichai/twitter)
இந்தியாவில் கோவிட் -19 நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், உலக நாடுகள் தமது உதவிகளை முன்வந்து வழங்கி வருகின்றன.

இந்த வரிசையில் தொழில்நுட்ப நிறுவனங்களும் உதவிகளை வழங்குவதாக அறிவித்து வருகின்றன. இதன்படி கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ .135 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளது.

கூகிளின் பல ஊழியர்களும் இந்த நிதிக்கு நன்கொடை அளித்துள்ளதாகவும் இந்தியாவுக்கு உதவ முன்வந்த 900க்கும் மேற்பட்ட கூக்லர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ரூ .3.7 கோடி இதில் அடங்கும் எனவும் கூகுள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக ‘கிவ் இந்தியா’ கும், ‘யூனிசெப்’ நிறுவனத்திற்கும் இந்த நிதி வழங்கப்பட உள்ளது.

இது குறித்து இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “கிவ் இந்தியா”, “நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவர்களின் அன்றாட செலவுகளுக்கு பண உதவி வழங்கும்” என்று அறிவித்துள்ளது.

 

உலகளாவிய தொண்டு நிறுவனமான யுனிசெப், கூகுளின் நிதியை “ஒக்ஸிஜன் மற்றும் சோதனை உபகரணங்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பொருட்களைப் பெற, இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு பயன்படுத்தும்” என தெரிவிக்கப்படுகின்றது.

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, திங்களன்று விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவில் மோசமடைந்து வரும் கொவிட் நெருக்கடியைக் கண்டு வருந்துவதாக” கூறியுள்ளார்.

அதேபோல் இந்தியாவில் நிலவும் சூழலை பார்த்து மனமுடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

‘அமெரிக்க அரசு இந்தியாவிற்கு உதவ முன்வந்ததற்கு நன்றி. மருத்துவ உபகரணங்கள், ஒக்ஸிஜன் உற்பத்தி செய்யும் சாதனங்களை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் தொடர்ந்து உதவும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.