
இந்தியாவின் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 55 மணி நேரம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு தொடங்கிய முழு ஊரடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளான பால், மளிகை, இறைச்சி, காய்கறி கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய பணிகளைத் தவிர, பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் முழு ஊரடங்கை முன்னிட்டு 16 சிறப்பு ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை ஊரடங்கின் போது அரசு மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டுமென்றும், பயணிகள் என்றால் டிக்கெட் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.