October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஜோ பைடனுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்கின்றோம்” : கோட்டாபய

இலங்கை – அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்காக, ஜோ பைடனுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியடைந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்காக உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கின்றோம்” என்று கோட்டாபய ராஜபக்‌ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோ பைடனுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்‌ஷ தனது டுவிட்டரில் ” ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  இலங்கை – அமெரிக்காவுக்கு இடையில் 72 ஆண்டு கால இராஜதந்திர உறவுகள் காணப்படுகின்றன. அதனை மேலும் பலப்படுத்துவதற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.