October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜஸ்தானிடம் மண்டியிட்டது சென்னை

(Photo: BCCI/IPL)

ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. பெப் டு பிலெசி, ஷேன் வொட்ஸன், ஷாம் கரன், அம்பாட்டி ராயுடு ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களில் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனைத்தொடர்ந்து ஆடிய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி – ரவீந்திர ஜடேஜா ஜோடி 51 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆறுதல் கொடுத்தது. தோனி 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கவனயீனமாக ஓடி ரன்அவுட் ஆனார்.

ரவீந்திர ஜடேஜா 35 ஓட்டங்களைப் பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

ஜொப்ரா ஆச்சர், கார்திக் தியாகி, எஸ். கோபால், ராகுல் டிவேட்டா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 126 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 28 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. என்றாலும் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

நான்காம் விக்கெட்டுக்காக இணைந்த இவர்கள் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக ஈட்டிக்கொடுத்தனர். ஜோஸ் பட்லர் 2 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 70 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 26 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

10 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி ஐந்தாமிடத்தைப் பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று வெற்றிகளுடன் கடைசி இடத்துக்கு பிள்தள்ளப்பட்டுள்ளது.