June 17, 2025 10:04:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லண்டனில் பொலிஸ் நிலையம் மீது காரை மோதி, தீ மூட்டிய நபர் கைது!

photo: Twitter/@999London

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நபர் ஒருவர் பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது காரை மோதி, தீ மூட்டி தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

வடக்கு லண்டனின் புறநகர்ப் பகுதியான எட்மண்டனில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த சம்பவம் தொடர்பில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லண்டன் மாநகர பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தின் நுழைவாயில் மீது மோதிய காரால் தொடர்ந்தும் கண்ணாடித் தடுப்பை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் காரில் இருந்து நிதானமாக கையில் பெற்றோல் கேனுடன் இறங்கிய சந்தேகநபர், காரின் மீதும் அருகே வீதியில் நின்று கொண்டிருந்த பஸ் ஒன்றுக்கு முன்னாலும் பெற்றோலை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

அப்போது வீதியின் மறுபுறத்தில் நின்றவாறு சம்பவத்தை அவதானித்த நபர் ஒருவர், உடனடியாக விரைந்து சென்று சந்தேகநபரைத் தாக்கி தரையில் வீழ்த்தியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வாகனங்களில் விரைந்து வந்த பொலிஸார் உடனடியாக சந்தேகநபரை மடக்கிப் பிடித்து தடுத்து வைத்துள்ளனர்.

பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து தீயை அணைத்ததால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

நிலைமையை விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸாருக்கும் அவசரசேவைப் பணியாளர்களுக்கும் நன்றி கூறுவதாக லண்டன் மாநகர மேயர் சாதிக் கான் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.