September 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகை அச்சத்துக்குள் தள்ளும் லெபனானில் பேஜர் வெடிப்புக்கள்!

லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே லெபனானில் செவ்வாய்க்கிழமை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்து சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 2800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட பேஜர்களில் உள்ள பேட்டரியில் வெடிமருந்தை கலந்து இஸ்ரேல் வெடிக்க வைத்ததாக ஹிஸ்புல்லா இயக்கம் குற்றஞ்சாட்டுகின்றது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகளும் வெடித்துள்ளதாக இதில் 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. .

இதற்கிடையே வீடுகளில் இருந்த சோலார் தகடுகளும் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் லெபனான் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்த மக்கள் பயப்படும் நிலை உள்ளது.