May 30, 2025 6:40:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வியன்னாவின் பல இடங்களில் ‘பயங்கரவாதத் தாக்குதல்கள்’

ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் பல்வேறு இடங்களில் இன்று மாலை நடந்துள்ள துப்பாக்கித் தாக்குதல்களில் பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

வியன்னா நகரின் மத்தியப் பகுதியில் 6 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் காவல்துறையினர் கூறுகின்றனர்.

யூத வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு அருகே முதலில் தொடங்கிய தாக்குதல், பின்னர் நகரின் பல இடங்களில் தொடர்ந்துள்ளது.

பல துப்பாக்கிதாரிகள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

யூத வழிபாட்டுத் தலம் அருகே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவை ‘பயங்கரவாதத் தாக்குதல்களே’ என்பது தெளிவாகத் தெரிகின்றது என்று ஒஸ்ட்ரியாவின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

வியன்னா நகரம் எங்கிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உஷார்படுத்தியுள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.