
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குள் ஆயுதக் குழுவொன்று நடத்திய தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரச எதிர்ப்பு ‘அல்- ஷபாப்’ தீவிரவாத இயக்கமே இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்-கைதா ஆதரவுடன் இயங்குவதாக கூறப்படும் இந்த இயக்கம் சோமாலியாவின் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை இலக்கு வைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 20 ஆம் திகதி இவர்கள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு கார்களை ஹோட்டலின் நுழைவு வாயிலில் மோத செய்து வெடிக்க வைத்துள்ளனர்.
பின்னர் துப்பாக்கி சூடுகளை நடத்தியவாறு ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து சோமாலிய பாதுகாப்பு படையினர் ஹோட்டலுக்குள் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது தீவிரவாத கும்பலுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் போது தீவிர கும்பலால் 20இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை பாதுகாப்பு பிரிவினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாத கும்பலில் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.