
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில், அதனால் ஏற்படக் கூடிய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்காக மலிவு விலையில் அதனை விற்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்ததை தொடர்ந்து உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலைமையில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதேவேளை, ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை தாங்கள் படிப்படியாக நிறுத்த இருப்பதாக பிரிட்டனும் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது ரஷ்யாவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடியை சமாளிக்க மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி முதல் கட்டமாக 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே விரைவில் கையெழுத்தாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறன நிலைமையில் ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்குவது இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிலைநிறுத்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.