July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்!

உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான பரக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்பட்ட ஜேக் டார்சி பதவி விலகுவதாக அறிவித்ததையடுத்து அந்த பதவிக்கு பரக் அகர்வால் தெரிவாகியுள்ளார்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட பரக் அகர்வால் 2011 முதல் கடந்த 10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

கடந்த ஒக்டோபர் 2017 முதல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) பரக் அகர்வால் பணியாற்றி வந்துள்ளார்.

ஜேக் டார்சி தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பில், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பரக் மீது தாம் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த 10 வருடங்களாக அவரது பணி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரது திறமை, மனித நேயத்திற்கு தாம் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பரக் அகர்வால், கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் நிறுவனங்களின் உயர் பதவிகளை வகிக்கும் இந்திய-அமெரிக்கர்களின் பட்டியலில் இணைந்துள்ளமை உலகத்தவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.