May 27, 2025 19:26:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் பரவும் கொவிட்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் கொவிட் பரவல் அதிகரிக்கும் தன்மை காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பரவல் நிலைமை தீவிரமடையும் நிலைமை காணப்படுவதாகவும், இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய கண்டத்திற்கான பிரதானி ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில், 2022 பெப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பிய கண்டத்தில் கொவிட் காரணமாக மேலும் 5 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் சுகாதார கட்டுப்படுகளை கடுமையாக பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

இந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, மக்கள் ஒன்று கூடுவதன் மூலம் கொவிட் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்பதனால், முன்கூட்டியே இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.