October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாதது பிரிட்டனின் தோல்வி’: பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை

கொரோனா பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தாதது பிரிட்டனின் தோல்வி என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டனின் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு ஆணைக்குழுவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவும் இதனைத் தெரிவித்துள்ளன.
கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் விட்ட தவறு, பிரிட்டனின் பொது மருத்துவத் துறையில் ஏற்பட்ட மோசமான தோல்வி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் முதலாவது முடக்கத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம் உயிரிழப்புகளை அதிகரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லண்டனில் கொரோனா தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் 2020 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டாலும், மார்ச் மாதம் 23 ஆம் திகதியே தேசிய முடக்க நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கல் திட்டம் போன்ற சில செயற்பாடுகளில் வெற்றிகளும் இருப்பதாக அறிக்கைக்கு எதிராக சில உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு, அபிவிருத்தி மற்றும் தடுப்பூசி வழங்கும் திட்டம் பிரிட்டனின் வரலாற்றில் மிகத் தாக்கம் மிக்க செயற்பாடாகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.